1985ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் கண்டெடுக்கப்பட்டு, அடையாளம் தெரியாமல் சுமார் 40 ஆண்டுகள் ஒரு மேஜை இழுப்பறைக்குள் (Drawer) வைக்கப்பட்டிருந்த ஒரு விசித்திரமான எலும்பு, அண்டார்டிகா கண்டத்தில் கண்டறியப்பட்ட முதல் டைனோசர் எலும்பு தான் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 1985-ல், புவியியலாளர் டாக்டர் மைக் தாம்சன் (Dr Mike Thomson) அண்டார்டிக் தீபகற்பத்தில் பாறை அடுக்குகளை வரைபடமாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு விசித்திரமான எலும்பைக் கண்டெடுத்தார்.
தனது கள நாட்குறிப்பில் (Field Diary), “ஒரு பெரிய ஊர்வன விலங்கின் முதுகெலும்பு” (Vertebra of large reptile) என்று பென்சிலால் எழுதி, அந்த 10 சென்டிமீட்டர் அகலமுள்ள எலும்பின் வரைபடத்தையும் வரைந்து வைத்தார்.
அதன்பின், அந்த எலும்பு இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வேயின் (BAS) புவியியல் சேகரிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு அது யாருடையது என்று அடையாளம் காணப்படாமலேயே, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஒரு அலமாரிக்குள் முடங்கிக் கிடந்தது.
சமீபத்தில், முதுகெலும்புப் புதைபடிவ நிபுணத்துவப் பின்னணி கொண்ட BAS சேகரிப்பு மேலாளர் டாக்டர் மார்க் எவன்ஸ் (Dr Mark Evans), இந்த எலும்பை கூர்ந்து கவனித்து ஆராய்ந்தார்.
அவரது ஆய்வின் முடிவில், அது நிலத்தில் வாழ்ந்த விலங்கினங்களிலேயே மிகப்பெரிய உயிரினமான ‘டைட்டானோசர்’ (Titanosaur) என்ற டைனோசர் இனத்தின் முதுகெலும்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டைட்டானோசர்கள் எப்படிப்பட்டவை?: இவை நீண்ட கழுத்து மற்றும் நீண்ட வால்களைக் கொண்ட தாவர உண்ணி டைனோசர்கள் ஆகும் (பிராண்டோசரஸ் போன்ற வடிவம்). இவற்றில் சில 35 மீட்டருக்கும் அதிக நீளமும், 15 டன்னுக்கும் அதிக எடையும் கொண்டவை.
அண்டார்டிகா டைனோசர்: தற்போது கண்டறியப்பட்டுள்ள எலும்பு, சுமார் 6 அல்லது 7 மீட்டர் நீளமுள்ள ஒரு சிறிய அல்லது இளம் (Juvenile) டைட்டானோசருடையதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
82 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகா எப்படி இருந்தது?
இந்த எலும்பு சுமார் 82 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் பாறை அடுக்கில் கண்டெடுக்கப்பட்டது.
“அப்போது அண்டார்டிகா இன்று இருப்பது போல பனியால் உறைந்த கண்டமாக இருக்கவில்லை. அது அடர்ந்த காடுகளையும், மிதமான வெப்பமான தட்பவெப்பநிலையையும் கொண்ட பசுமையான பகுதியாக இருந்தது,” என்று டாக்டர் மார்க் எவன்ஸ் விளக்கியுள்ளார்.
இந்த டைனோசர் நிலத்தில் வாழ்ந்த போதிலும், அதன் எலும்பு கடல் பாறையில் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர்.
இந்த விலங்கு நிலத்தில் இறந்த பிறகு, அதன் உடல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் மிதந்திருக்கலாம் என்றும், பின்னர் அது கடற்படுகையில் புதைந்து காலப்போக்கில் புதைபடிவமாக (Fossil) மாறியிருக்கலாம் என்றும் BAS தெரிவித்துள்ளது.
அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பால் பாரெட் இதுகுறித்துக் கூறும்போது, “இந்த கண்டுபிடிப்பு, தென்னகக் கண்டங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்திருந்த காலத்தில், டைனோசர்கள் எவ்வாறு ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பயணித்தன என்பதைப் புரிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது,” என்றார்.
பூமியின் வெப்பநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் உருகி பின்வாங்கும்போது, அங்கு மறைந்துள்ள இன்னும் பல டைனோசர் காலத்து ஆதாரங்கள் வெளிவரக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
