இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதம் விளாசி அசத்தினார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.
இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 329 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 161- ஓட்டங்களையும், ரகானே 67- ஓட்டங்களையு; எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மோயின் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலந்து அணி, அஸ்வினின் மாயாஜால சுழலில் சிக்கியது. 59.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 134 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
195 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் எடுத்தது. 3- ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
எனினும் விராட் கோஹ்லி ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ரிஷப் பண்ட், ரகானே என முன்னணி வீரர்கள் வெளியேறியதால், இந்திய அணி 86- ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த அக்சர் படேலும் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இதையடுத்து 7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய அஸ்வின், விராட் கோஹ்லி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக அஸ்வின் துரிதமாக ஓட்டங்களை சேர்த்தார்.
விராட் கோஹ்லி, அஸ்வின் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் விராட் கோஹ்லி 62 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குல்தீப் யாதவ் 3 ரன்னும், இஷாந்த் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்ததாக அஸ்வினுடன், சிராஜ் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஸ்வின் 134 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இது அவருடைய 5-வது டெஸ்ட் சதமாகும். தொடர்ந்து ஆடிய அஸ்வின் 106 (148 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் முகமது சிராஜ் 16 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில் இந்திய அணி 85.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. இதன்படி இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 481 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியின் சார்பில் மொயின் அலி மற்றும் ஜாக் லேஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், ஸ்டோன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்படி இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.