7 ஆம் திகதி தமிழகத்தில் களமிறங்குகிறார் சசிகலா – ஆட்சியை கைப்பற்றுவோம் எனவும் சூளுரை

பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா எதிர்வரும் 7ஆம் திகதி தமிழகம் வருகிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த மாதம் 27-ம் திகதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே ஜனவரி 20-ஆம் திகதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனால், சசிகலா 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 31-ம் திகதி  சசிகலா மருத்துவ கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும், வைத்தியர்களின் ஆலோசனையின் பிரகாரம் பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தேவனஹல்லி அருகே ஒரு பண்ணை வீட்டில் சசிகலா தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்தநிலையில், விடுதலையான சசிகலா எப்போது தமிழகம் வருவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் அக்கட்சியின் நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொள்ள நேற்று மதுரை வந்தார்.

இன்று காலை அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து பிரச்சார வாகனத்தின் மூலம் மதுரையில் நெல் பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து திருமண மண்டபத்திற்கு சென்றார். திருமண விழா முடிந்த பின்னர், திருமண மேடையில் டிடிவி தினகரன் பேசியதாவது:-

பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா வரும் 7 ஆம் திகதி தமிழகம் வருகிறார். உண்மையான தொண்டர்கள், விஸ்வாசத்தின் பக்கம் உள்ளார்கள் சசிகலா பக்கம் இருக்கிறார்கள். சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம். ஜெயலலிதா ஆட்சியை அமைக்க, அதிமுகவை மீட்டெடுக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம். மேலும், சசிகலா தமிழக வருவதால் பலரும் அச்சத்தில் உள்ளனர். சசிகலா விடுதலையான நிலையில் ஜெயலலிதா நினைவிடம் பணி நிறைவு பெறாமல் அவசர அவசரமாக திறக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Articles

Latest Articles