ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை அச்சுறுத்தி தாக்குதல் நடத்த முயற்சித்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று சபையில் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலக பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது எனவும், இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் சாணயக்கியன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
“ பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம் என்று கூறி தாக்க முற்பட்டார். பிரதமர் என்பவர் சிங்களவருக்குரியவரா? அவர் நாட்டின் பிரதமர் இல்லையா?
இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும்? எனது முறைப்பாடு தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை குழு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் சண்டிதனம் தெரியும். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென ஒழுக்கம் உள்ளது, அது பாதுகாக்கப்பட வேண்டும்.” – எனவும் சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.