2028ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை மாறும்

2028 ஆம் ஆண்டளவில் இலங்கையை கண்ணிவெடி மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லாத நாடாக நாங்கள் மாற்றுவோம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் சுமார் 23 கிலோமீற்றர் கண்ணிவெடிகளே அகற்றப்பட உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
கண்ணிவெடிகள் இருந்த முழு நிலத்திலிருந்து 1,340.87 கிலோமீற்றர் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியில் 2,492,081 கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
வடமாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதன் மூலம் பொதுமக்களின் எதிர்கால பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய கண்ணிவெடி அகற்றும் விழிப்புணர்வு  நிகழ்வில் நேற்று (06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். குறித்த இந்நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
உலக கண்ணிவெடிகள் தினம் ஏப்ரல் 4 ஆம் திகதி  கொண்டாடப்படுவதோடு, அந்த நிகழ்வில் ” தேசிய கண்ணிவெடி  நடவடிக்கை மையம்” மூலம் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கண்ணிவெடி அகற்றும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் நட்புறவை வளர்க்கும் வகையில் கிரிக்கெட் போட்டியும் பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியும் இடம்பெற்றது.
கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பயிற்சியளிக்கப்பட்ட நாய்களின் விஷேட செயல்விளக்கம் மற்றும் கண்ணிவெடி அகற்றும் உபகரணங்களை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களால் அவதானிக்கப்பட்டது.
கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், இங்கு பணிபுரியும் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் விசேட வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
2002 ஆம் ஆண்டு முதல், கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் நாட்டுக்குள் இயங்கி வந்ததுடன், 2010 ஆம் ஆண்டு ‘தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம்’ ஆரம்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இயங்கிய இந்த நிலையம் தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவின் கீழ் இயங்குகின்றது. இது கண்ணிவெடி அகற்றும் முகவர் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி மற்றும் மேற்பார்வை செய்கிறது.
இலங்கை இராணுவம் நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு நேரடி பங்களிப்பை வழங்குகிறது மற்றும் அது இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவின் ஊடாக செய்யப்படுகிறது. மேலும், HaloTrust மற்றும் Mag ஆகிய இரண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் Dash மற்றும் SHAF ஆகிய இரண்டு உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான தரைத்தள அகற்றல் பிரிவுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது. மற்ற 4 அரசு சாரா நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து வழங்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் நிம்மதியாக இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பம் எனவும், அதனை சீர்குலைக்க முயற்சிக்கும் வடக்கு அல்லது தெற்கில் உள்ள இனவாத மதவாத அமைப்புக்களோ அல்லது தனி நபர்களோ ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles