மொட்டு கட்சியில் இருந்து வெளியேறியோருக்கு பொறி வைப்பு!

கட்சியின் ஒழுக்கத்தை மீறிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை ஒழுக்காற்று குழுவிற்கு வழங்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

பொதுஜன பெரமுனவிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள மற்றும் உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நேற்று(09) கூடிய அரசியல் குழுவில் கலந்துரையாடப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அவ்வாறான பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படக்கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் அரசியல் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கட்சியின் ஒழுக்காற்று குழுவிற்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பொதுஜன பெரமுனவில் வெற்றிடமாகக் காணப்படும் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளுக்கு விரைவில் பொருத்தமானவர்களை நியமிக்க அதன் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, அனைத்து மாவட்டங்களுக்கும் மகளிர் ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்பதற்கும் அரசியல் குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று(09) பிற்பகல் கூடியது.

Related Articles

Latest Articles