ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் சுதந்திரக்கட்சி மேலும் பிளவை சந்தித்துள்ளது.
விஜயதாச ராஜபக்சவின் இந்நியமனத்தை சு.கவின் உப தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன், கொழும்பு மற்றும் அத்தனகல தொகுதி அமைப்பாளர்களும் இதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மைத்திரி அணி, சந்திரிக்கா அணி, நிமல் அணி, தயாசிறி அணி என ஏற்கனவே பல அணிகளாக சுதந்திரக்கட்சி பிளவுபட்டுள்ள நிலையில் தற்போது விஜயதாச ராஜபக்சவின் நியமனத்தால் மற்றுமொரு அணியும் உதயமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விஜயதாச ராஜபக்ச தமது கட்சியில் உறுப்புரிமை பெற்றது தமக்கு தெரியாது எனவும், தமது நலன்களுக்காக மைத்திரிபால சிறிசேன சுதந்திரக்கட்சியை விற்பனை செய்யும் நிலைக்கு வந்துவிட்டார் எனவும் சுதந்திரக்கட்சி செயற்பாட்டாளர்கள் சிலர் விமர்சித்துவருகின்றனர்.










