தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமைச்சரவை எண்ணிக்கை 25 ஆக வரையறுக்கப்படும் எனவும், அமைச்சருக்கு ஆலோசனை வழங்க சபையொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் வெளிவிவகார அமைச்சர் நீங்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அவ்வாறு இன்னும் தீர்மானிக்கவில்லை. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை மாத்திரமே தற்போது தெரிவுசெய்துள்ளோம். தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் பிரதமர் யார், வெளிவிவகார அமைச்சர் யார், அமைச்சரவைக்கு நியமிக்கப்படும் நபர்கள் தொடர்பில் தீர்மானம் இல்லை. எனினும், அமைச்சரவையில் எண்ணிக்கை 25 ஆகவும், இராஜங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆகவும் காணப்படும்.
அமைச்சருக்கு ஆலோசனை வழங்க சபையொன்று நிறுவப்படும். அதில் துறைசார் நிபுணர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு சம்பளம், சலுகைகள் வழங்கப்படமாட்டாது. அவர்கள் தன்னார்வ அடிப்படையில் சேவையாற்றுவார்கள்.” – என்றார்.
