நுவரெலியா மாவட்ட மக்களுக்கு முழுமையான அரச சேவை அவசியம்: 25 ஆயிரம் கையொப்பங்களுடன் மகஜர் கையளிப்பு

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு கிடைக்கும் அரச சேவைகளை மாவட்ட மக்கள் பூரணமாக பெற்றுக்கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்து நுவரெலியா மாவட்ட பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் 25 ஆயிரம் கையொப்பங்களுடன் மகஜர் ஒன்றை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.

இன்று (05.06.2024) பிற்பகல் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு அணியாக வருகை தந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், நுவரெலியா மாவட்ட உதவி மேலதிக செயலாளர் தினிகா கவிசேகரவின் காரியாலயத்திற்கு சென்று மகஜரை கையளித்தனர்.

இதையடுத்து ஊடகங்களுக்கு இவ் விடயம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது நுவரெலியா மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் பி.சக்திவேல் கருத்துரைக்கையில் தெரிவித்தாவது,

“ நுவரெலியா மாவட்டத்தில் காணப்பட்ட நுவரெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேச செயலகங்களுக்கு மேலதிகமாக தலவாக்கலை, நோர்வூட் மற்றும் வலப்பனையில் மூன்று பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டன.

இவ்வாறு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய பிரதேச செயலகங்களில் அரச சேவைகளை பொதுமக்கள் பூரணமாக பெற்றுகொள்ள முடியாத வகையில் அங்கு இடம் மற்றும் ஆளணி பற்றாக்குறை உட்பட பௌதீக வளங்களின் பற்றாக்குறைகள் நிலவுகின்றது.

ஆகையினால் இங்கு சேவைகளை பெற்றுக்கொள்ள செல்லும் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரீகங்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன் ஆவணங்களை பெற்றுக்கோள்வதிலும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் மேலும் மூன்று பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

அதேபோல இம் மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் கிராம உத்தியோகஸ்தர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை.
இதனால் பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் முறையான அரச சேவைகளை இன்னும் பெற்றுக்கொள்ள முடியாத சமூகமாகவே காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் மக்கள் பெருவாரியாக வசிக்க கூடிய பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிரதேச செயலகங்களில் காணப்படும் குறைப்பாடுகளை இனங்கண்டு நிவர்த்திக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை நாம் எழுத்து மூலமாகவும்,25 ஆயிரம் பொது மக்களின் கையொப்பங்களுடனும் கையளித்துள்ளோம் என தெரிவித்தார்.

Related Articles

Latest Articles