டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகின்றன. முதல் அரையிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து அரையிறுதி சுற்றுகள் நாளை தொடங்குகின்றன. குரூப் 1 பிரிவில் முதல் இரு இடங்கள் பிடித்த இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் குரூப் 2 பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதிப்போட்டி இலங்கை நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தரூபா பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில், தான் ஆடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதி வரை முன்னேறும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த முறை இறுதிப்போட்டிக்கு சென்று சாதித்துக் காட்டவேண்டும் என்ற எழுச்சியுடன் உள்ளது.
இதேபோல், ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை வலுவான அணிகளை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றில் உகாண்டா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா அணிகளையும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தையும் வீழ்த்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது.
எனவே இம்முறை ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைய கடுமையாகப் போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.