நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
கடந்த (30) ஆம் திகதி மாலை நுவரெலியா – தலவாக்கலை வீதி பஸ் சாரதிக்கும், நுவரெலியா -ஹட்டன் வீதி சொகுசு பஸ் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு இறுதியில் கைகலப்பில் முடிந்துள்ளது.
இதனையடுத்து அன்றிரவு இனந்தெரியாத நபர்களால் நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் இரண்டு பஸ்களின் முன் பக்கம் உள்ள கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தை கண்டித்தும், சந்தேக நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் நுவரெலியா – தலவாக்கலை வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நேற்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்கின்றது.
இதற்கு ஆதரவு தெரிவித்து தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபாடும் தனியார் பேருந்து ஊழியர்களும் இன்று இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு நேற்றைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த தனியார் பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் இணைந்து, சேவையில் ஈடுபட்ட நுவரெலியா – ஹட்டன் சொகுசு பேருந்துகளுக்கும் அதில் பயணம் செய்த பயணிகளுக்கும் லிந்துலை மற்றும் தலவாக்கலை பகுதிகளில் நடுவீதியில் தடுத்து நிறுத்தப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டி அராஜகமாக செயல்பட்டதாக தெரிவித்து இன்றைய தினம் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பேருந்து பயணங்களை மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,ஊழியர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.