ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்தாண்டுகளே!

அரசமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களேயாகும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்துக்கு இன்று தெரியப்படுத்தியுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் உயர்நீதிமன்றில் முன்னிலையான பிரதிசொலிசிட்டர் ஜெனரல் கனிஸ்க டிசில்வா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

அத்துடன், குறித்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் காலப்பகுதி தொடர்பில் விளக்கமளிக்கும் வரை, ஜனாதிபதித் தேர்தலில் நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தினால் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரித்தி பத்மன் சூரசேன மற்றும் துரைராஜா ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related Articles

Latest Articles