எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வற்புறுத்தவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைப்பது குறித்து தமது கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு பொருத்தமான நபர் தமது கட்சியில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு நன்றியுள்ள ஒரு நபராக அவரது வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் நேற்று (13) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியதாவது:
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடவத்த நகரில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
அரசின் திட்டத்தால் கவரப்பட்டவர்கள் ஏராளமானோர் உள்ளனர். நாம் அவர்களிடம் செல்ல வேண்டும். இல்லையெனில், மக்கள் எங்களிடம் வருவார்கள் என்று காத்திருந்து இந்த போட்டியில் விளையாட முடியாது. எனவே, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் கிராமத்திற்கு செல்ல வேண்டும்.
இம்மாதம் 17ம் திகதிக்கு பிறகு தேர்தல் திகதியை முடிவு செய்யும் முழு அதிகாரமும் தேர்தல் ஆணையாளருக்கு உள்ளது. ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 15ம் திகதி நடத்தப்பட வேண்டும்.
எங்கள் தரப்பில் இருந்து யார் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பதில் உங்களுக்கு சிக்கல் இருக்கும். நான் இப்போது இருக்கும் சூழ்நிலையும் உங்களுக்கு தெரியும். நாங்கள் நன்றியுள்ள மக்கள். நாங்கள் மொட்டுக் கட்சியை உருவாக்கி மிகக் குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்தோம்.பிரதமர் எங்கள் கட்சியில் இருந்து நியமிக்கப்பட்டார், ஆனால் எங்கள் தலைவர்கள் 2022 ஆகும் போது அதிகாரத்தை கைவிட்டு விட்டு எங்கள் தலைவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அன்றைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக் கூடிய தலைவராக ரணில் விக்கிரமசிங்க அவர்களைக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பார்த்தார். எனவே நாட்டின் தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க எமது கட்சியின் தலைவர் தீர்மானித்தார். அதற்கு நாங்கள் நிபந்தனையின்றி ஆதரவை வழங்கினோம்.
அன்று எங்கள் கட்சிக்காரர்கள் பாரிய கஷ்டத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.அதை நான் விசித்திரமாகச் சொல்ல விரும்பவில்லை, ஆனால் இரண்டு வருடங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மீட்டெடுக்கவும், உடைந்து போன சட்டம் ஒழுங்கையும் ஸ்திரப்படுத்தவும் முடிந்தது.
ஆனால் நாட்டு மக்களுக்கு இன்னும் பிரச்சினைகள் இருப்பதை நாம் அறிவோம். எனவேதான் சர்வதேச நாணய நிதியத்தின் மேலதிக ஆதரவைப் பெறுவதற்கு நாம் எதிர்காலத்தில் திட்டமிட்டு செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கூறுகின்றார். அப்படித் திட்டமிட்டுச் செயல்படும் போது, மக்களுக்குச் சலுகைகளை வழங்குவது இலகுவாகி விடுகிறது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.ஜனாதி பதி மட்டுமல்ல.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார நிபுணருமான பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் இந்த கொடி பாலத்தை கடக்க வேண்டும் என்று இப்போது கூறுகிறார்கள். ஆனால் அப்போது அந்தக் கொடி பாலத்தைக் கடக்க எல்லோரும் பயந்தார்க்ள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே சவாலை ஏற்றுக்கொண்டார். தற்போது சில வேடங்களில் நடித்து முடித்துள்ளார்.
எங்களுடைய அரசியல் கருத்துக்கள் மாறுபட்டது. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவராக ரணில் விக்கிரமசிங்க வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். அதனால்தான் அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நான் கூறுகின்றேன்.
அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், நான் நிச்சயமாக அவருக்கு ஆதரவளிப்பேன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் ஜனாதிபதி வேட்பாளரைப் பரிந்துரைக்கவில்லை. எமக்குத் தெரிந்தவரை கட்சிக்கு பரிந்துரைக்கும் வேட்பாளர் இல்லை. மற்ற வேட்பாளர்களில், சர்வதேச ஆதரவைப் பெறக்கூடியவர், சர்வதேச தொடர்புகளைக் கொண்டவர் மற்றும் சவால்களை ஏற்கக்கூடியவர் தற்போதைய ஜனாதிபதி ஒருவர் மட்டுமே.
அவ்வாறாயின் செய்நன்றி அறிந்த மனிதனாக, தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை அவர் இதுவரை கூறவில்லை. .அவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நாங்கள் வற்புறுத்துகிறோம்.
பட்டதாரிகள் இன்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய இப்போது அரசாங்கத்தில் பணியில் இருக்கும் பட்டதாரிகளுக்கு விருப்பம் இல்லை.அதனால்தான் இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் அரசியல் கட்சிகள் இருக்கின்றன.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்பி, பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்புவது த்மது பிள்ளைகள் நடுவீதியில் இறங்கி கூச்சலிட்டு போராடுவதற்கல்ல.இப்போது போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர்.அரசியல் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, பட்டதாரிகளின் வேலை வாய்ப்புப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் கடுமையாக உழைத்து வருகிறது.
