லயன்களுக்குள்ளேயே பெருந்தோட்ட மக்களை முடக்க சதி!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை லயன் என்ற கல்லறைக்குள் தொடர்ந்து முடக்கி வைக்கும் நோக்கிலேயே பெருந்தோட்ட குடியிருப்பு பகுதிகளை கிராமங்களாக்கும் நயவஞ்சக சூழ்ச்சி திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆதரித்து துரோகத்துக்கு துணை நிற்பதற்கு நாம் தயாரில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

லயன் யுகத்துக்கு முடிவுகட்ட வேண்டுமென மலையக சமூகம் ஓரணியில் திரண்டு போராடிவரும் நிலையில், அதனை திசை திருப்பும் நோக்கிலேயே இவ்வாறான திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கும் ஆளுங்கட்சி பக்கம் உள்ள மலையக தலைமைகள் ஆமாம் சாமிபோடுவது சமூகத்துக்கு இழைக்கும் மற்றுமொரு துரோகமாகவே அமையும் எனவும் வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மலையக பெருந்தோட்ட குடியிருப்பு பகுதியை கிராமங்களாக பிரகடனப்படுத்துவதற்குரிய பூர்வாங்க திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள லயன்களை அகற்றிவிட்டு, தனி வீடுகளை அமைத்து தனி கிராமங்களை உருவாக்குவது இதன் நோக்கம் அல்ல. மாறாக லயன் அறைகளுக்குள்ளேயே எமது மக்களை முடக்கி வைக்கும் நயவஞ்சக திட்டமே இதன் பின்னணியில் உள்ளது.

இதற்கு ஜனாதிபதியிடம் நேரில் எதிர்ப்பை வெளியிடவே நேற்றைய சந்திப்புக்கு நாம் சென்றிருந்தோம். மலையகத்தில் எவ்வாறு கிராமங்கள் அமைய வேண்டுமெனவும் சுட்டிக்காட்டி இருந்தோம்.

எனினும், பெருந்தோட்ட சமூகத்துக்கு அநீதியாக அமையவுள்ள மேற்படி திட்டத்துக்கு ஆளுங்கட்சி பக்கம் உள்ள மலையக அரசியல்வாதிகள் ஆதரவு வழங்கியுள்ளமை வெட்கக்கேடாகும். இது சமூகத்துக்கு இழைக்கும் பெரும் அநீதியாகும்.

காணி உரிமை இல்லை, தனி வீடுகள் இல்லை, லயன்களிலேயே முடங்கி கிடங்கள் என்ற தகவலே இதன்மூலம் வழங்கப்பட்டுள்ளது. இனிப்பு கலந்துள்ள இந்த கசப்பு மாத்திரையை நம்பி ஆளுங்கட்சி பக்கம் உள்ள அரசியல்வாதிகள் ஆமாம் சாமி போட்டாலும், நாம் அவ்வாறு ஏமாறமுடியாது. எமது சமூகத்தின் வலியை போக்க, பக்கவிளைவற்ற, நிரந்தரமாக குணமாக்ககூடிய மருந்தே எமக்கு தேவை. அவ்வாறான திட்டம் முன்வைக்கப்பட்டால் அதற்கு நிச்சயம் ஆதரவு வழங்குவோம்.

லயன்களுக்கு பதிலாக மாடி லயன்களை அமைத்து மகிழ்ந்தவர்கள் வேண்டுமானால் ‘கிராமம்’ என்ற சொல்லை நம்பி ஏமாறலாம். மாறாக உரிமை அரசியல் நடத்திவரும் எம்மால் சமூகத்துக்கு அநீதி இழைக்கும் திட்டங்களை ஆதரிக்க முடியாது. அதை துணிந்து எதிர்ப்போம். அதனையே தற்போது செய்துள்ளோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles