சஜித் வெற்றிபெறுவாரென இந்திய உளவு பிரிவு தகவல்?

“ ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் என இந்திய உளவு பிரிவான றோ அமைப்புகூட தெரிவித்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணையவுள்ளனர் என்ற தகவல் ஐக்கிய தேசியக் கட்சியினரால் தொடர்ச்சியாக பரப்பட்டுவருகின்றது. ஆனால் அது போலியான தகவலென்பது உறுதியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் ஜனாதிபதி பக்கம் வராவிட்டால் அவருக்கு மொட்டு கட்சியின் ஆதரவு கிட்டாது. அதனால்தான் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என்றெல்லாம் கூறப்பட்டுவருகின்றது.

கட்சிகளை உடைத்து குழப்பத்தை ஏற்படுத்துவது ரணிலுக்கு கைவந்த கலை. அதனால்தான் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்குகூட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமது கட்சியில் இருந்து எவரும் செல்லவில்லை. சிலர் சென்றால்கூட அது சலுகைக்கான தாவலாகவே இருக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க மூன்றாவது இடத்திலேயே உள்ளார், மொட்டு கட்சியின் ஆதரவு கிட்டாவிட்டால் நான்காவது இடத்துக்கு தள்ளப்படுவார். இதனால் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாரா என்பது சந்தேகமே.

அதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை ஜனாதிபதி நடத்தமாட்டார் என நம்புகின்றோம். அவ்வாறு நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தினால்கூட ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நடத்தப்பட்டாக வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார். றோ அமைப்புகூட இதனை தெரிவித்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது.” –என்றார்.

Related Articles

Latest Articles