“நான் மஹிந்த ராஜபக்சவின் வலது கை என்ற போதிலும் நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி ரணில் பக்கம் தற்போது நிற்கின்றேன். அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் அவருக்கே வாக்களிப்பேன்.” – என்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“பண்டாரநாயக்க எனது மாமா, சிறிமா எனது அத்தை, சந்திரிக்கா எனது அக்கா, ஜெனரல் ரத்வத்த எனது தந்தை, இவ்வாறு அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்தே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
எனவே, ஜே.வி.பியினரின் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம். பேய்களுக்கு பயமெனில் சுடுகாட்டில் வீடு கட்டமாட்டோம் என்பதை அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கூறிவைக்க விரும்புகின்றோம்.
ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும்போது கை நடுங்கியது. ஆனால் அந்த முடிவு சரியென்பது இன்று உறுதியாகியுள்ளது. அது மகிழ்ச்சியளிக்கின்றது. எனவே, அடுத்த தேர்தலிலும் நான் ரணில் பக்கம்தான் நிற்பேன். ரணிலை ஜனாதிபதியாக்கிவிட்டே அடுத்து கம்பஹாவுக்கு வருவேன்.” – என்றார்.
