மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24) இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மே முதலாம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. கொட்டகலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி, சம்பளத்தை 1700 ரூபாவினால் அதிகரிப்பதாக உறுதியளித்தார்.
அந்த வர்த்தமானி மே 21 அன்று மீண்டும் திருத்தப்பட்டு மற்றுமொரு வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஜூன் 10 ஆம் திகதி அனைத்து வர்த்தமானிகளும் ரத்து செய்யப்பட்டு மற்றொரு வர்த்தமானி வெளியிடப்பட்டது.
தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று கேட்க விரும்புகிறேன். கடந்த வாரம் ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் எமது நாட்டின் டொலர் கடனில் 60 வீதத்தை செலுத்த முடிந்துள்ளது.
எமது நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரும் மக்களின் வாழ்க்கை நிலைமை இன்று கீழ் மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. வர்த்தமானியை ரத்து செய்ததன் பின்னர் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை என்ன? ” – என்றார் வேலுகுமார்.