மலையக மக்களின் முதன்மை கோரிக்கையாக காணி உரிமை முன்வைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
“ மலையக பெருந்தோட்ட மக்கள் 200 வருடங்கள் கடந்தும் காணி உரிமை அற்றவர்களாகவே உள்ளனர். இன்றைய அரசாங்கம் அதனை மேலும் இழுத்தடிப்பு செய்யும், லயன் அறைகளை கிராமங்களாக பிரகடனப்படுத்தும் அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்துள்ளது.
அதனை சட்டமாக்கவும் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது. மலையக மக்களின் காணி உரிமையை முழுமையாக குழி தோண்டி புதைக்கும் செயற்பாடாகவே இது உள்ளது. இதனை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும்.
மாறாக ஜனாதிபதி தேர்தலில் தனி வீட்டுக்கான காணி மற்றும் வாழ்வாதார காணி என்பவற்றை பெற்றுக்கொள்வதை முதன்மையான கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வேலை திட்டத்தை ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு காணி உரிமை ஒரு கோஷமாகவே பேசப்படும்.” – எனவும் வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.