மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் இரகசியச் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் ஊடக நிறுவனமொன்றின் உரிமையாளரின் வீட்டிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு , ராஜபக்ச தரப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தச் சந்திப்பை குறித்த ஊடக நிறுவன உரிமையாளர் ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
சஜித் பிரேமதாச வெற்றிக்காக பணம், ஊடக பலம் ஆகியவற்றை பிரயோகிக்கத் தயார் என்றும், சஜித் பிரேமதாசவின் வெற்றியின் பின்னர், தனது சகோதரனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சஜித் தரப்புடன் அவர் பேரம் பேசியுள்ளார் எனத் தெரியவருகின்றது.
தனது சகோதரனை விடுதலை செய்வதற்கான பேரத்தை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர், தனியார் ஊடக நிறுவன உரிமையாளர் முன்வைத்த போதிலும், நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட முடியாது என்றும், அந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் ஊடாக கையாளுமாறும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கி, புதிதாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதியின் மூலம் இதனை சாதித்துக் கொள்ள மேற்படி ஊடக நிறுவன உரிமையாளர் திட்டம் தீட்டியுள்ளார்.
2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவளித்ததும் இந்த நிபந்தனையின் அடிப்படையில் என்பதுடன், கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர், ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி குறித்த நபரின் தம்பியை விடுதலை செய்யப்பட்டது மட்டுமன்றி, அவருக்கு வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தை நாடி, குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச தரப்பினர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும் பட்சத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வரவும், 2030ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் உதவிகளை செய்யவும் ஊடக நிறுவன உரிமையாளம் இணக்கம் வெளியிட்டுள்ளார்.