அனைவருக்கும் சம உரிமை: வட்டுக்கோட்டையில் பிரதமர் உறுதி!

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசமைப்பு இயற்றப்படும் எனவும், நாட்டினுள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையாளங்கள் பேணவும் வழிசமைப்போம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய தெரிவித்தார்.

வட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

‘ இனங்களுக்கு இடையில் எட்டப்படாதிருக்கும் இன ஐக்கியத்தினை இத்தடைவை காண வேண்டும் என்பதே எமது ஒரே நோக்கமாகவுள்ளது.
எமது நாடு பல்வகைமையைக் கொண்டதாகும். அது பரந்துபட்டதாகும். அவ்வாறான நிலையில் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் சிறப்பானதொரு வாழ்க்கையை நாட்டிற்குள் வாழ்வதற்கான சமத்துவ உரிமை காணப்படுகின்றது.” எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அனைவரும் தமது அடையாளங்களை உறுதிப்படுத்தும் அதேநேரம், அனைவரும் ஒற்றுமையாக வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது.

இலங்கை என்பது எமது வீடு. எமது வீட்டுக்குள் பிரச்சினைகள் உள்ளன. எமது வீட்டுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்கள் தான் தீர்க்க வேண்டும்.

உள்நாட்டு போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். தங்களுடைய அதிகார பலம் வீழும்போது இனவாதத்தினை , மதவாதத்தினை ஏற்படுத்துவார்கள். அதனை மக்கள் தோல்வியடைச் செய்தபோதும் தற்போது இனவாதத்தினை, மதவாத்தினை தூக்கிப் பிடிப்பதற்கு முனைகின்றார்கள்.

அடுத்த ஒருமாதத்துக்குள் அவ்வாறு கூக்குரல் இடுபவர்கள் சத்தம் முழுமையாக நின்றுவிடும். அதன்பின்னர் எமது எதிர்காலத்தினை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முடியும்.
புதிய அரசியலமைப்பை உருவக்குவது எமது இலக்குகளில் ஒன்றாகும். அந்த அரசியலமைப்பினை அனைவருடனும், கலந்துரையாடியே அவர்களின் தீர்மானத்துக்கு அமைவாக முன்னெடுப்போம். அது எமது பொறுப்பாகும்.” – எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles