தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள வலியுறுத்தி, புசல்லாவை ரொச்சைல்ட் (Rothschild) தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் இன்று (17) அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டக் களத்திற்கு நேரில் விஜயம் செய்த தொழிலாளர் தேசிய முன்னணியின் (NUW) உப தலைவர் சண்முகராஜ் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்களுக்குத் தங்களது ஆதரவை வெளியிட்டதோடு, அவர்களுடன் இணைந்து அடையாள உண்ணாவிரதத்திலும் பங்கேற்றனர்.
பின்னணி
ரொச்சைல்ட் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் ஐந்து பேர் திடீரென நிர்வாகத்தினால் பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அத்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தோட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் கட்சி பேதமின்றி இப்பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தன.

தொழிலாளர்களின் இந்த நியாயமான போராட்டம் குறித்துக் கேட்டறிந்த தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவர் சண்முகராஜ், சம்பவ இடத்திற்குச் சென்று தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
அத்துடன், இந்த அநீதியான பணிநீக்கம் தொடர்பாக கம்பளையில் உள்ள தொழில் திணைக்கள (Labor Department) அலுவலகத்தில் உடனடியாக முறைப்பாடு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்தார்.
அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை
இதன் விளைவாக, இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை கம்பளை தொழில் திணைக்களத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றிற்கான நேரம் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது தமக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், ஏனைய தொழிலாளர்கள் தங்களது பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டு இன்று முதல் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.
எனினும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஐந்து தொழிலாளர்களும், தமக்குத் தொழில் திணைக்களத்தில் இருந்து உறுதியான தீர்வு கிட்டும் வரை தங்களது நீதிக்கான போராட்டத்தை ஓயப்போவதில்லை என அறிவித்து, இன்று இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










