போர் களத்தில் நேருக்கு நேர் மோதிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்சக்கள் அதனை செய்தனர் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
களுத்துறையில் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இராணுவ வீரர்கள் மீது சிலருக்கு தற்போது புது விதமான மரியாதை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்ததை பெரும் குறையாக குறிப்பிட்டுவருகின்றனர்.
ஆனால் நாம் அது குறித்து கவலை கொள்ளவில்லை. ஏனெனில் ராஜபக்சக்கள்தான் இராணுவத்தினரைக் கொண்டு இலாபம் தேட முற்படுகின்றனர்.” எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ராஜபக்சக்கள், அன்று யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தளபதியான என்னை சிறையிலடைத்து நன்கு உபசரித்தனர்.
என்னுடன் பணியாற்றிய இராணுவத்தில் முக்கிய பதவி நிலைகளை வகித்த 35 இராணுவ அதிகாரிகள் ஓய்வூதியம் இன்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டனர்.
சரத் பொன்சேக்காவை சிறையிலடைத்ததை தன்னால் அனுமதிக்க முடியாது என தற்போது நாமல் கூறுகின்றார். ஆனால் அதனை அவரது தந்தையும், சிறிய தந்தையும் அனுமதித்தனர்.
எனது மகள்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் போது, அவர்கள் விமான நிலையத்தில் பல மணித்தியாலங்கள் தடுத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
பிரபாகரன் கூட இவ்வாறு எமது குடும்பங்கள் மீது தாக்குதல்களை நடத்தவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் எமது குடும்பத்தினரையும் பழிவாங்கினார்கள்.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.