நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இம்புல்பிட்டி தோட்டம் – கல்லாறு பகுதியில் குடியிருப்புப் பாதிப்பிற்குள்ளான 10 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தமக்கு நிரந்தரத் தீர்வு கோரி நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லாறு, இம்புல்பிட்டி மற்றும் நாவலப்பிட்டிப் பிரிவுகளைச் சேர்ந்த இந்தப் பத்து குடும்பங்களின் வீடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு அரச அதிகாரிகளிடம் இவர்கள் எழுத்து மூலமாகத் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளனர்.
சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகளிடமிருந்து பதில் கடிதங்கள் கிடைத்த போதிலும், தமது பிரச்சினைக்கு இதுவரை எவ்வித நிரந்தரத் தீர்வும் வழங்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிடுகின்றனர். இவ்விடயம் தொடர்பாகப் பிரதேச செயலாளரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதற்குக் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அண்மையில் பெய்த கன மழை காரணமாகக் குடியிருப்புகளின் பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் உயிருக்குப் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில, பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச செயலாளரை நேரில் சந்தித்துத் தங்களது அவலநிலையை எடுத்துரைப்பதற்காகச் சென்றபோது, தங்களை அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு கூறப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் மனவேதனையடைந்த மக்கள், தங்களது கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வழங்கக் கோரி, நாவலப்பிட்டி பிரதேச செயலக அலுவலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.











