தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (21) உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மிரிஹான பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று புதன்கிழமை (20) குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவிட கோரி தேசபந்து தென்னக்கோன் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் தேசபந்து தென்னக்கோனின் முன்பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles