தமிழில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் முமைத் கான். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
சில வருடங்களாக சினிமாவில் அவரைப் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் 7 வருடங்களாக, தான் படுத்த படுக்கையாக இருந்ததாகவும் 15 நாட்கள் கோமாவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஏழு வருடங்களுக்கு முன் வீட்டுக்குள் ஒரு விபத்தைச் சந்தித்தார் முமைத் கான். அதில் அவர் மூளையில் 5 நரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அவர் கோமா நிலைக்குச் சென்றார். 15 நாட்கள் நடந்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சுய நினைவு திரும்பியது.
பின்னர் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் படுத்த படுக்கையானார். மருத்துவர்கள் குறைந்த பட்சம் ஏழு வருடங்களுக்கு எந்த வேலையும் உடற்பயிற்சியும் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தினர். அவர் எடுத்துக் கொண்ட மருந்துகள் அவரின் உடல் எடையை அதிகரிக்கச் செய்தன. இதனால் சினிமாவில் இருந்து விலகினார்.
இப்போது, ஹைதராபாத்தில் ‘விலைக்’ என்ற என்ற மேக்கப் மற்றும் சிகை அலங்கார பயிற்சி அகாடமியைத் தொடங்கியுள்ளார். இது அவரை வெற்றிகரமான தொழிலதிபராக மாற்றி இருக்கிறது.
இது பற்றி முமைத்கான் கூறும்போது, “நான் 13 வயதிலிருந்தே என் பெற்றோருக்காக உழைக்கத் தொடங்கி விட்டேன். என் இளமைக் காலத்தை உழைப்பில் செலவழித்ததால், திருமணம் பற்றியோசிக்க நேரமில்லை. கடவுள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தார், பிறகு அவரே எடுத்துக்கொண்டார். இப்போது மீண்டும் புதிய பாதையைக் காட்டியிருக்கிறார்” என்றார்.
