இலங்கையில் நடைபெறும் T20 கிரிக்கெட் உலகக்கோப்பை (T20 World Cup) போட்டிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
இலங்கையில் நடைபெறும் T20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான முழுமையான பாதுகாப்பு கட்டமைப்பை அமுல்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
இந்தப் போட்டியின் சர்வதேச முக்கியத்துவத்தையும், உலகம் முழுவதிலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெருமளவிலான பார்வையாளர்களை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், முப்படைகள், புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளது.
அனைத்து போட்டி மைதானங்கள், அணிகல் தங்கியிருக்கும் ஹோட்டல்கள், பயிற்சி தளங்கள், விமான நிலையங்கள் மற்றும் ரசிகர் மையங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும்.
24 மணி நேரமும் செயல்படும் வகையில் மைதான சுற்றுவட்ட பாதுகாப்பு, நுழைவு கட்டுப்பாடு, வாகன சோதனை நிலையங்கள் மற்றும் கூட்டம் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் போட்டிகள் நடைபெறும் காலம் முழுவதும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும்.
பங்கேற்கும் அணிகள், போட்டி அதிகாரிகள், விஷேட பிரமுகர்கள் (VIP) மற்றும் இராஜதந்திரிகளின் பாதுகாப்பு விடயங்கள் விசேட பாதுகாப்பு பிரிவுகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
CCTV கண்காணிப்பு உட்பட நவீன கண்காணிப்பு முறைகள், நிகழ்நேர களநிலவரம் தொடர்பாக அறியவும் விரைவான பதிலளிப்பு திறனையும் மேம்படுத்தவும் உதவும்.
வான்வழி பரப்பு கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் அவசரநிலை பதிலளிப்பு குழுக்கள் மற்றும் அவசர மருத்துவ குழுக்கள், அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
போட்டியின் சிறப்பை பாதுகாக்கும் அதேவேளை, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை நிலைநிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உறுதியளிக்கிறது.
மேலும் பொதுமக்கள், குறிப்பாக பார்வையாளர்கள், பாதுகாப்பு தரப்பினருடன் ஒத்துழைத்து, போட்டி மைதானங்களின் வழிகாட்டல்களை பின்பற்பற்றி, ஒழுங்கு விதிமுறைகளை நிலைநிறுத்தவும், சந்தேகத்துக்கிடமான செயல்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்ய சட்ட அமுலாக்க தரப்பினருக்கு உதவுமாறும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக் கொள்கிறது.
உலகத்தரம் வாய்ந்த சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை உயர்ந்த தொழில்முறை மற்றும் சிறந்த முறையில் நடத்தும் இலங்கையின் திறனை பிரதிபலிக்கும் வகையில், பாதுகாப்பான மற்றும் மறக்கமுடியாத T20 உலகக்கோப்பை (T20 World Cup) போட்டி அனுபவத்தை வழங்க இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதிபூண்டுள்ளது.










