( இரா. சுரேஷ்குமார் தெமோதரை நிருபர்)
பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்டச் சமூகங்களை மையமாகக் கொண்டு, அரச சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு விசேட கூட்டுத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அரச இயந்திரத்திற்கும் அடிமட்ட மக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, சேவைகள் நேரடியாக மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்த திட்டம் சர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இதில் UNOPS, Australian Aid, UK aid, VRIDDHI மற்றும் The Power Foundation ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன.
இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சவால்களால் அதிகம் பாதிக்கப்படும் பெருந்தோட்டப் பகுதிகள் இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான மழை, மண்சரிவு அபாயம், மற்றும் நீடித்த வறுமை நிலை போன்ற சவால்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
இத்திட்டம் மூன்று பிரதான தளங்களில் செயல்படுத்தப்படுகிறது.
அரச திணைக்களங்களின் சேவைகளை பெருந்தோட்டபகுதி மக்களுக்கு விரைவாக கொண்டு சேர்த்தல், சமூக அடிப்படையிலான அமைப்புகள், பெண்கள் குழுக்கள் மற்றும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குதல், மேலும் அதிகாரிகளும் மக்களும் நேரடியாக கலந்துரையாடும் Interface Meetings மூலம் சேவைத் தடைகளை நீக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
பெண் தலைமையிலான குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், துப்புரவு உபகரணங்கள், வீட்டுத் தோட்ட மற்றும் சிறு விவசாய ஆதரவு, சிறுதொழில் ஊக்குவிப்பு போன்ற வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படுகின்றன.
இத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்றக் கலந்துரையாடல் நிகழ்வு, பதுளை நகரில் அமைந்துள்ள Riverside Hotel Badulla ரிவர்சைட் விடுதியில் இன்று (25) நடைபெற்றது. இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், திட்டப் பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் மற்றும் லுணுகலை பார்க் தோட்டம், அடாவத்தை தோட்டம், சோலன்ஸ் தோட்டம், ஒப்டன் தோட்டம், ஹாலி எல உணுகலை தோட்டம், அப்புதலை தோட்டம் மற்றும் காஹகலை தோட்டம் ஆகிய பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
