ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் 253 ரன்கள் குவித்த போதிலும் கடைசி ஓவர் வரை போராடி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி அரை இறுதியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் 170 ரன்கள் இலக்கை நியூஸிலாந்து அணி 12.5 ஓவர்களை எட்டி வெற்றி கண்டிருந்தது.
இந்திய அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
2007 மற்றும் 2024-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்து இருந்தது.
அதேவேளையில் நியூஸிலாந்து அணி 2-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. அந்த அணி கடந்த 2021-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து இருந்தது.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற, நிறைய துணிச்சல் தேவை, ஆனால் அதிர்ஷ்டமும் இல்லாமல் இருக்க முடியாது. இந்த வகையில் அது ஒரு சரியான ஆட்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நடக்க வேண்டும்.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற பெருமையையும் பெறும். ஏனெனில் இதுவரை எந்த அணியும் 3 முறை கோப்பையை வென்றது இல்லை.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.27.48 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.14.65 கோடியை பெறும்.
நியூஸிலாந்து அணி கடந்த 11 வருடங்களாக ஐசிசி நடத்தும் தொடர்களில் 5 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதில் அந்த அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டுமே பட்டம் வென்றது. 50 ஓவர், டி20 வடிவிலான போட்டிகளில் அந்த அணி 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்த சோகத்துக்கு தீர்வு காண அந்த அணி இம்முறை முயற்சிக்கக்கூடும்.
