“இந்து சமுத்திரத்தில் ஈரான் போர்க்கப்பல்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவால் இலங்கைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படவில்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் (10) நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,
“தாக்குதல் நடத்திய தரப்போ அல்லது தாக்குதலுக்கு உள்ளான தரப்போ எமக்கு எவ்வித தகவலையும் வழங்கவில்லை.
இரு நாடுகளுக்கிடையிலான போரின்போது ஒரு நாடுமீது நடத்தப்படவுள்ள தாக்குதலை மூன்றாம் தரப்பு நாட்டுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றில்லை.
கடற்படைக்கு இது பற்றி எவ்வாறு தகவல் கிடைத்தது என்பது குறித்து எனக்கு துல்லியமாக தெரியாது.
அந்தப் பகுதியில் சில சடலங்கள் மற்றும் உயிர் காக்கும் அங்கிகள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே எமது கடல்சார் மீட்பு நிலையத்திற்கு செய்தி கிடைத்தது.










