ரவிராஜ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு- எதிரிகளின் விடுதலையும் ரத்து

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட எதிரிகளின் விடுதலையை ரத்து செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, நீதியரசர்களான பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது, அவரது மரணத்திற்குக் காரணமானது, மற்றும் அப்போது அவருடன் பயணம் செய்த காவலர் லக்ஸ்மனை கொலை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், பிரதிவாதிகள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் கடற்படை புலனாய்வு அதிகாரிகளாவர்.

இந்த வழக்கு 2016-ஆம் ஆண்டில் ஒரு சிறப்பு நடுவர் மன்றத்தின் முன் விசாரிக்கப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும், ஒருமனதாக விடுவிக்கப்பட்டனர்.

இந்த விசாரணை நடைமுறையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, சட்டமா அதிபர், நடுவர் மன்றத்தின் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்தார்.

நீதிபதியின் வழிகாட்டுதல்கள் நள்ளிரவு வரை நீடித்ததாகவும், விசாரணை இரவு சுமார் 11:00 மணி வரை தொடர்ந்ததாகவும், நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

பதிவேடுகளை ஆய்வு செய்த பின்னர், வழக்கை முன்னெடுத்துச் செல்லப் போதுமான சான்றுகள் இருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்து, பிரதிவாதிகளின் விடுவிப்புத் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், இந்த வழக்கை மேல்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.

Related Articles

Latest Articles