நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து சடலம் மீட்பு!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (06) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக இன்று (06) திங்கட்கிழமை காலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளை நகரை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் முஷாமின் எனவும் இவர் நீண்ட காலமாக நுவரெலியா நகரில் ஹோட்டல்களில் தொழில் புரிந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும் கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த நபரை காணவில்லை என சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களோடு தகவல் பரிமாறப்பட்டது

குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது அந்த நபரை எவராவது கொலை செய்து வாவியில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் நுவரெலியா பொலிஸார் மற்றும் தடையவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் கம்பளை உள்ள உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வி.தீபன்ராஜ்

Related Articles

Latest Articles