– யாழில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் ஆலோசனை
யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்களை மீட்டெடுப்பதற்கான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று புதன்கிழமை பிற்பகல் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.
“தையிட்டியில் அடுத்தது என்ன?” எனும் தலைப்பில் ‘தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரையால் நிலமிழந்த தமிழர்கள்’ அமைப்பின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது.
தையிட்டி நிலங்களை அளவீடு செய்து விடுவிப்பதாக அமைச்சர் இ.சந்திரசேகர் அண்மையில் அறிவித்திருந்த போதிலும், அங்கு சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் நிலைப்பாடு குறித்துத் தெளிவான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஒருபுறம் பேச்சுகள் இடம்பெற்றாலும், மறுபுறம் குறித்த விகாரையைப் பதிவு செய்வதற்கான முயற்சிகள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
அரசின் இத்தகைய சதித்திட்டங்களை முறியடித்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை முழுமையாக மீட்பதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன், க.சுகாஷ் மற்றும் தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.










