யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று காலை 9 மணியளவில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அகழ்வுப் பணிகளின் ஆரம்பக் கட்டமாக, புதைகுழி வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றி நிலத்தைத் துப்பரவு செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னதாக இரண்டு கட்டடங்களாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
முதலாம் கட்டத்தின்போது 9 நாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
இரண்டாம் கட்டத்தின்போது 45 நாள்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி, 54 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது, தடயவியல் அகழ்வாய்வுத் தளங்கள் 1 மற்றும் 2 ஆகியவற்றிலிருந்து மொத்தமாக 240 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 239 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மூலம் மேலதிக தடயங்கள் மற்றும் சான்றுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
