நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும்!

தற்போதைய அரசு நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதோடு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வு சீர்குலைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றச் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே எதிர்வுகூறல்களைக் கூறி வருகின்றார். அவர் நாட்டின் ஜனாதிபதியா அல்லது நீதித்துறையின் பிரதான ஊடகப் பேச்சாளரா என்ற சந்தேகம் எழுகின்றது.

நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி வர்ணனையாளராகச் செயற்படுவது நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும்.

நீதிபதிகளின் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்காமல் இந்த அரசு இழுத்தடிப்பு செய்து வருகின்றது.” – என்றார்.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அரசு முன்னெடுக்கும் பொருளாதாரக் கொள்கைகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.

“வரி வலை விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் மக்கள் வறுமையின் உச்சத்துக்கே தள்ளப்பட்டுள்ளனர்.

முதியோர்களின் சேமிப்புகளுக்கு வழங்கப்பட்ட 15 வீத வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாரிய அளவில் பாதித்துள்ளது.” – என்றார்.

அரசு மக்களுடன் கொண்டுள்ள சமூக ஒப்பந்தத்தை மீறிச் செயற்படுகின்றது என்று தெரிவித்த சஜித் பிரேமதாஸ, “மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகும். இந்த உடன்படிக்கையை மீறி அரசு தொடர்ந்து செயற்பட்டால், மாற்று அரசு என்ற ரீதியில் எதிர்க்கட்சி மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடும்.” – என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மக்களுக்கு உடனடியாக வரி நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாத்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles