” இலங்கையில் மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எமக்கென தனிப்பட்ட அடையாளம், வரலாறு உள்ளது. எனவே, மலையக மக்களுக்குரிய அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கின்றேன்.”
இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜீவன் தொண்டமான் எம்.பி., இது தொடர்பில் கூறியவை வருமாறு ,
” விஜயை இதுவரைகாலம் நடிகராக பார்த்த மக்கள் தற்போது தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் வாக்குமூலம் தமிழகத்தில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது கச்சத்தீவு குறித்து அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
நான் அமைச்சராக இருந்தபோது அதிக தடவைகள் தமிழ் நாடு சென்றுள்ளேன். அங்கு கச்சத்தீவென்பது முக்கிய பிரச்சினை கிடையாது.
தமிழகத்தில் முகாம்களில் வாழும் நமது சொந்தங்களின் பிரச்சினையே முதன்மையானது. அதேபோல மீனவர் பிரச்சினையும் தொடர்கின்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சியின்கீழ் விஜய் இலங்கை வருவார் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த புதிய உறவின் ஊடாக மேற்படி பிரச்சினைகளை தீர்க்கலாம் என நம்புகின்றோம்.’ – என்றார் ஜீவன் தொண்டமான்.










