2021 – முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பம்!

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும், பாடசாலைகளில் 2021 ஆம் ஆண்டில் முதல் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின.

சுகாதார அமைச்சின்  வழிகாட்டலுக்கு அமைவாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி வலய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்புரையின் அடிப்படையில் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலின் பிரகாரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

சமூக இடைவெளி, கை கழுவுதல், உடல் வெப்பநிலை அறிதல், போக்குவரத்து என சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு முதல் தவணைக்கான வகுப்புகள் தரம் 02 முதல் தரம் 13 வரையிலான இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, அட்டன், வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்தை ஆகிய ஐந்து கல்வி வலயங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு பாடசாலை மூடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகின்ற காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏனைய கல்வி வலயங்களில் வழமை போன்ற கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களின் வருகையும் பாதிப்பற்ற வகையில் காணப்படுகின்றது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஆரம்ப முதல் இதுவரை நாட்டில் பாடசாலை கல்வி நிலை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. மாணவர்களும் கல்வி நிலையில் பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தநிலையில் ஆரம்ப கல்வி மாணவர்கள் பாதியளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அந்தவகையில் பத்து மாதங்களுக்கு பின் முறையான கல்வி நடவடிக்கையில் ஆரம்ப கல்வி மாணவர்கள் முதல் அணைவரும் காலடி எடுத்து வைக்கின்றமை குறிப்பிடதக்கது.

அதேவேளை, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் பிரிதொரு நாளிலேயே ஆரம்பிக்கப்படும்.

Related Articles

Latest Articles