தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு, எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி iPEN நிறுவனத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடு நேற்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் போது கைத்தொழில் அமைச்சு, தொழிலாளர் திணைக்களம், சம்பள நிர்ணய சபை மற்றும் திறைசேரி ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையாகி, சம்பள உயர்வு தொடர்பான அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விளக்கினர்.
அப்போது, பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே தற்போது சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும், ஏனையோருக்கு வழங்குவது குறித்து இதுவரை எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார், பதிவு செய்யப்பட்டவர் அல்லது பதிவு செய்யப்படாதவர் என்ற எவ்வித நிபந்தனையுமின்றி, உழைக்கும் அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஒரே சீரான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை iPEN அமைப்பு ஆணித்தரமாக வலியுறுத்தியது.
விசாரணையின் போது, மொத்தமாகச் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் இருப்பதாக அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர். எனினும், அவர்களில் 80 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கே சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, பதிவு செய்யப்படாத சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்பதைப் பெருந்தோட்ட அமைச்சின் மேலதிக செயலாளர் தெளிவுபடுத்தினார்.
“பதிவு செய்யப்படாத தொழிலாளர்களுக்குத் தற்போதைய சம்பளம் எவ்வாறு வழங்கப்படுகிறது? அவர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள்?” போன்ற கேள்விகளை iPEN அமைப்பினர் முன்வைத்தனர்.
உழைப்பில் சமமான பங்களிப்பை வழங்கும் தொழிலாளர்களைப் பிரித்துப் பார்ப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரை:
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மனித உரிமைகள் ஆணைக்குழு, இவ்விடயம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தங்களது இறுதி நிலைப்பாடுகள் மற்றும் அதற்கான நியாயப்படுத்தல்களை அடுத்த அமர்விற்கு முன்னதாக எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களது நியாயமான சம்பள உயர்வுக்காகவும் எமது சட்டப் போராட்டமும் தார்மீகப் போராட்டமும் தொடரும் என iPEN அமைப்பு தெரிவித்தது.










