அமெரிக்க வான்டை தளம்மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

தெற்கு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வான்படைத் தளம் ஒன்றை இலக்கு வைத்து தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது.

தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவத் தளம் எந்த நாட்டில் அமைந்துள்ளது என்ற விபரத்தை ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

எனினும், அமெரிக்க ராணுவத் தளத்தைக் கொண்டுள்ள அண்டை நாடான குவைத், தனது வான்பரப்பில் நுழைந்த “பகைமை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களை” வான் பாதுகாப்புப் படை தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணைகள் எங்கிருந்து ஏவப்பட்டன என்ற விபரத்தைக் குறிப்பிட குவைத் மறுத்துவிட்டது.

முன்னதாக, ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் நான்கு தற்கொலைப்படை ட்ரோன்களை தங்களது படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் அறிவித்திருந்தது.

ஈரானின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான பண்டார் அப்பாஸில் (Bandar Abbas) உள்ள ராணுவ தளம் ஒன்றின் மீதும் அமெரிக்கா துல்லியத் தாக்குதலை நடத்தியது.

இத்தளத்திலிருந்து ஐந்தாவது ட்ரோன் ஏவப்படவிருந்த இறுதி நிமிடத்தில், இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) கூறியுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் அமெரிக்கா ஈரான் மீது நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதல்கள் முற்றிலும் தற்காப்புக்காகவே நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இந்நிலையிலேயே ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

Related Articles

Latest Articles