அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து குளியாப்பிட்டிய நோக்கி, எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சுமார் 6000 கிலோ கழிவுத் தேயிலையை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று (11) இரவு கைப்பற்றியுள்ளனர்.
ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஷனன் வத்தை பகுதியில் வைத்து குறித்த டிப்பர் வாகனம் மறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, அந்த கழிவுத் தேயிலையைக் கொண்டு செல்வதற்கான முறையான அனுமதிப்பத்திரங்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட 6000 கிலோ கழிவுத் தேயிலை, டிப்பர் வாகனம் மற்றும் சந்தேகநபரான சாரதி ஆகியோர் இன்று (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.










