“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னமும் அந்தத் துயரமான துன்பத்தில் இருந்து மீளாத மக்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு நட்டஈடாக வெறும் பணத்தை வழங்குவதன் மூலமாக இந்த மன உளைச்சலுக்கான தீர்வு ஒருபோதும் கிடைக்காது. பாதிக்கப்பட்ட மக்களின் உளக் காயங்களைத் தீர்க்கக்கூடிய ஒரே மருந்து அன்பு மட்டுமே.”
– இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 249 காணாமல்போனவர்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கைகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. இது வெறுமனே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்துக்குக் கிடைத்த தரவு மட்டுமேயாகும். இதற்கு மேலும் பதியப்படாத நபர்களும் இருக்கலாம். எனினும், ஒரு மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது சாதாரணமான விடயம் அல்ல.
இங்கு இருக்கின்ற தாய்மார்கள் இன்னமும் தங்களுடைய பிள்ளைகள் எங்கோ ஓரிடத்தில் உயிரோடு இருக்கின்றார்கள், இரகசியமாக வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தீராத எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.” – என்றார்.
இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டுகையில்,
“எங்களுடைய நாட்டில் நாம் இரண்டு பேரழிவான யுத்தங்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம். 30 வருடத்துக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றிருந்தது. தென்னிலங்கையிலும் கூட கடந்த 1987 – 1989ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். தெற்கிலும் பெற்றோர்கள் இன்னமும் தங்கள் பிள்ளைகளைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்” – என்றார்.
“மக்களுடைய உடல் காயங்களுக்கு எம்மால் மருத்துவம் செய்ய முடியும். ஆனால், அவர்களின் ஆழமான உளக் காயங்களுக்கு மருத்துவம் செய்ய முடியாது. அதற்கு வேறு விதமான மாற்றுத் தீர்வுகளே வழங்கப்பட வேண்டும்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தை ஒரு முதன்மை அபிவிருத்தி மையமாகக் கொண்டு தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது என்று குறிப்பிட்ட அமைச்சர், “உண்மையான நல்லிணக்கத்துடன் இனங்களுக்கு இடையிலே சமத்துவ மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும். இனிமேலும் நாம் தமிழர்கள், சிங்களவர்கள் என்று பிரிந்து சிந்திக்காது, மனிதர்களாகச் சிந்தித்து, ஒரே தாய் மக்கள் என்று கருதும் உன்னதமான நிலைமையை இந்நாட்டில் தோற்றுவிக்க வேண்டும்” – என்றும் தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.
