சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. 30 ஆம் திகதிவரை நாட்டில் தங்கி இருந்து முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத் தலைவர் இவான் பாபகியோர்கியோ தலைமையிலான குழுவே இலங்கை வருகின்றது.
இந்த ஒரு வார கால வருகையின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இலங்கை அரசு அதிகாரிகள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவும், இலங்கையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களின் நிலைப்பாட்டை மதிப்பிடவும் இந்த சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இலங்கை அரசுடன் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்த தங்களது குழு ஆர்வமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பாபகியோர்கியோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் அடுத்தகட்ட நிதி உதவி திட்டங்களுக்கு இந்த அதிகாரப்பூர்வ அளவிலான சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.










