நாட்டில் டெங்கு நோய் தாண்டவமாடிவரும் நிலையில், அதனை ஒடுக்குவதற்குரிய டெங்கு ஒழிப்பு சமரை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்வருடம் ஜனவரி முதல் ஜுலை 01 வரையான காலப்பகுதிக்குள் 56 ஆயிரத்து 422 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஜுன் மாதத்தில் மாத்திரம் 21 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயினால் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர்.
நாட்டில் 14 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் இருந்தாலும் மேல் மாகாணத்திலேயே நிலைமை மோசமாக உள்ளது.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில் மாத்திரம் 29 ஆயிரத்து 612 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மொத்த பாதிப்பில் 52.47 சதவீதமாகும் என சுகாதார அமைச்சின் தரவுகளில் இருந்து அறியமுடிகின்றது.
நாட்டில் 124 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரவுகளில் டெங்கு பாதிப்பு தீவிரமாக உள்ளது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைய நாட்களில் நாளாந்தம் 800 டெங்கு நோயாளர்கள்வரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதால் சுகாதாரத்துறையும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
எனினும், நிலைமை இன்னும் எல்லைமீறவில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதேபோல நிர்மாணப்பணி முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படும் கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளைக் கண்காணிப்பதற்கு ட்ரோன்கள் களமிறக்கப்படவுள்ளன.
