உலகக் கோப்பை இறுதி 32 சுற்று ஆட்டத்தில், 10 வீரர்களுடன் விளையாடிய அமெரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் போஸ்னியா-ஹெர்சகோவினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (இறுதி 16) அதிரடியாக முன்னேறியது.
இதன் மூலம் உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெறுவதற்கான 24 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பரபரப்பான மற்றும் அதிவேகமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியின் இறுதிப் பகுதியில், அமெரிக்காவின் போலரின் பலோகன் (Folarin Balogun) முதல் கோலை அடித்தார்.
ஆனால், இரண்டாம் பாதியில் அவர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
எனினும், ஆட்டம் முடிய 8 நிமிடங்கள் இருந்தபோது மாலிக் டில்மேன் (Malik Tillman) ஒரு அற்புதாமான free kick மூலம் இரண்டாவது கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இரு அணிகளுக்கும் இடையே கடுமையான உடல் ரீதியான மோதல்கள் நிறைந்த ஆட்டமாக இது அமைந்தது.
அதிர்ஷ்டம் எப்போதும் ஆட்டத்தை நடத்திய அமெரிக்க அணிக்குச் சாதகமாக இருக்கவில்லை.
பலோகன் மற்றும் கிறிஸ்டியன் புலிசிக் (Christian Pulisic) ஆகியோர் அடித்த கோல்கள் நடுவரால் மறுக்கப்பட்டன.
மேலும், தாரிக் முஹாரெமோவிச்சைத் தடுத்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு கடுமையான தவறுக்காக (foul) பலோகன் சிவப்பு அட்டை பெற்று வெளியேற வேண்டியதாயிற்று.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே, மைதானத்தில் குழுமியிருந்த அமெரிக்க ரசிகர்கள் “U-S-A” என எழுப்பிய பலத்த ஆதரவு முழக்கங்களுக்கு மத்தியில், அமெரிக்க அணி போஸ்னியாவின் கோல் பகுதியை நோக்கித் தொடர் தாக்குதல்களைத் தொடுத்தது.
மீண்டும் அணியில் இணைந்த கிறிஸ்டியன் புலிசிக், எதிரணிக்குத் தொடர் அச்சுறுத்தலாக விளங்கிய பலோகன், மற்றும் சிறந்த பார்மில் இருந்த வெஸ்டன் மெக்கென்னி, மாலிக் டில்மேன் ஆகியோரின் வேகமான மற்றும் தீவிரமான ஆட்டத்தால் அமெரிக்கா இந்த வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம், ஐரோப்பிய அணிகளுக்கு எதிராகத் தொடர்ந்து 10 போட்டிகளில் தோல்வியடைந்திருந்த அமெரிக்காவின் மோசமான சாதனை முடிவுக்கு வந்தது.
அடுத்ததாக திங்கட்கிழமையன்று சீட்டிலில் (Seattle) நடைபெறவுள்ள இறுதி 16 சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா, பெல்ஜியம் அணியை எதிர்கொள்ளும்.










