இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளிய மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த தீவு தேசம் மீண்டும் ‘உயர்-மத்திய-வருமான’ (upper-middle-income) நாடாக அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
உலக வங்கி நேற்று வெளியிட்ட அதன் சமீபத்திய வருமான வகைப்பாடு புதுப்பிப்பில், இலங்கையை ‘கீழ்-மத்திய-வருமான’ பிரிவில் இருந்து மீண்டும் வகைப்படுத்தியுள்ளது.
தொழில்துறைகளின் பரவலான மீட்பு, சுற்றுலா மற்றும் நிதிச் சேவைகளின் வளர்ச்சி ஆகியவற்றின் ஆதரவோடு, 2025 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 5 விழுக்காடு வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இது 2022 ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து கிடைத்துள்ள ஒரு பாராட்டுக்குரிய மீட்சியாகும். மேலும், ஒரு கடினமான சீர்திருத்தத் திட்டத்தின்கீழ் ஸ்திரத்தன்மையையும் வளர்ச்சியையும் மீட்டெடுப்பதில் இலங்கையின் முன்னேற்றத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள புதிய அங்கீகாரமாகவும் இது அமைகிறது.
இலங்கையை “மீட்சியின் ஒரு கதை” என்று விவரித்த உலக வங்கி: “2022 இல் நாட்டை வீழ்ச்சியின் விளிம்பிற்கு கொண்டு சென்ற கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நிதி மற்றும் சுற்றுலா சேவைகளின் வளர்ச்சி மற்றும் தொழில்துறைகளின் மீளுயர்வு காரணமாக 2025 இல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5% வளர்ச்சியடைந்தது” என்று கூறியுள்ளது.
மேலும், “இந்த மறுவகைப்பாடு நாட்டின் மீளெழுச்சியின் ஒரு அடையாளமாகும், இருப்பினும் நாடு இந்த வரம்பை மிகக் குறுகிய வித்தியாசத்திலேயே கடந்துள்ளது” என்றும் அது சேர்த்துக் கொண்டது.
திருப்புமுனை மற்றும் மீட்சிக்கான காரணங்கள்
பொருளாதார நடவடிக்கைகளை பலவீனப்படுத்தி, தனிநபர் வருமானத்தை வீழ்த்திய தொடர்ச்சியான அதிர்ச்சிகளைத் தொடர்ந்து, உயர்-மத்திய-வருமான அந்தஸ்திலிருந்து சரிந்த இலங்கைக்கு இந்த உயர்வு ஒரு பெரிய திருப்புமுனையாகும்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அந்நியச் செலாவணி இருப்பு நெருக்கடி ஆகியவை 2022 இல் நாட்டின் இறையாண்மை கடன் செலுத்த முடியாத நிலைக்கு (sovereign default) இட்டுச் சென்றன. இது கடந்த தசாப்தங்களில் இல்லாத மிக ஆழமான பொருளாதார வீழ்ச்சிக்குள் நாட்டைத் தள்ளியது.
நேற்றைய மறுவகைப்பாடு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடன், நிதி ஒருங்கிணைப்பு, நாணய சீர்திருத்தங்கள் மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சியின் கீழ் அடைந்த முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
இந்த மீட்சிக்கு சுற்றுலாத்துறையின் புத்துயிர், வலுவான புலம் பெயர் தொழிலாளர்களின் பணம் (Worker Remittances), மேம்பட்ட வெளிநாட்டுத் துறை செயல்திறன் மற்றும் இரண்டு ஆண்டுகால சுருக்கத்திற்குப் பிறகு பொருளாதார வளர்ச்சிக்குத் திரும்பியது ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இந்த ஆதாயங்கள் இலங்கையின் தனிநபர் மொத்த தேசிய வருமானத்தை (GNI per capita) உலக வங்கியின் உயர்-மத்திய-வருமான வரம்பிற்கு மேல் உயர்த்த உதவியது.
உலக வங்கி உயர், உயர் நடுத்தர, கீழ் நடுத்தர மற்றும் குறைந்த என, நான்கு வகையான நாடுகளின் வருமான வகைப்பாடுகளைக் கொண்டுள்ளது:
இந்த வகைப்பாடுகள், முந்தைய நிதியாண்டின் தனிநபர் மொத்த தேசிய வருமான மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த ஆண்டுப் பதிப்பில் 218 நாடுகள் உள்ளடக்கப்பட்டன, மேலும் இதன் முடிவுகள் ஜூன் 2027 இறுதி வரை உலகளாவிய ஒரு குறிப்பாகப் பயன்படும்.










