வலுசக்தி அமைச்சு தொடர்பில், 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வலுசக்தி அமைச்சினால் 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், இந்த ஆண்டில் நிறைவு செய்யக்கூடிய திட்டங்கள் மற்றும் அடுத்த ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது செயல்பாட்டிலுள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்பு (Hybrid Renewable Energy System – HRES) திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இதன்போது கேட்டறிந்த ஜனாதிபதி, அத்தீவுகளை பசுமை வலுசக்தி தீவுகளாக அபிவிருத்தி செய்யவும், மேம்படுத்தவும் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், ஜெய்கா நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்ட வலுசக்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்கான 2027 வரவுசெலவுத் திட்ட நிதித் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தற்போது செயல்பாட்டிலுள்ள கொலன்னாவையிலிருந்து கொழும்பு துறைமுகம் வரையான இரண்டாவது நிலத்தடி மின் விநியோகக் பாதை (220 kV), சம்பூர் – கப்பல்துறை மின் விநியோக அபிவிருத்தித் திட்டம், புதிய ஹபரணை – கப்பல்துறை மின் விநியோக அபிவிருத்தித் திட்டம் (CEATP), பாதுக்கை 220kV மின் விநியோக உப நிலையம் (GSS) STATCOM நிறுவுதல், கூரைகளில் பொருத்தப்படும் சூரிய சக்தி சேகரிப்பு மற்றும் மெய்நிகர் நிகர அளவீட்டுத் திட்டம் (Virtual Net Metering Project) உள்ளிட்ட தற்பொழுது செயற்படுத்தப்படும் மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள பிரதான திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்.
அதேபோன்று, எரிபொருள் துறையில் தற்போது செயல்பாட்டிலுள்ள முக்கிய திட்டங்களான கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய தொகுதியில் புதிதாக 06 எண்ணெய் தாங்கிகளை அமைத்தல், முத்துராஜவெல எரிபொருள் களஞ்சிய தொகுதியில் புதிதாக 02 எண்ணெய் தாங்கிகளை அமைத்தல் மற்றும் எரிபொருள் வசதிகளை விரிவுபடுத்தும் திட்டம், கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய தொகுதியில் உள்ள தாங்கிகளை புனரமைத்தல்
, கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய தொகுதியின் 07 ஆவது வலயத்தில் எரிபொருள் நிரப்பும் வசதிகளை மேம்படுத்தல், உள்ளிட்ட 14 திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நிதித் தேவைகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, இந்த அனைத்து திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களுக்கு அதன் பலன்களை பெற்றுக்கொடுப்பதன் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தினார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகருமான துமிந்த ஹுலங்கமுவ, வலுசக்தி அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரசல் அபொன்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருடன் நிதி அமைச்சு மற்றும் வலுசக்தி அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
