பணியில் இருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் (WPC) ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில், மகுலுகஸ்வெவ பொலிஸ்நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் (Interdicted) செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தரப்பு தகவல்களின்படி, கடந்த ஜூலை 15 ஆம் திகதி தம்புள்ளை கம்உதாவ மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு, இந்த கான்ஸ்டபிள் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பியுள்ளார்.
நிலையத்திற்கு வந்த அவர், அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் அருகில் சென்று, அவரது மடியில் அமர முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் இச்சம்பவம் குறித்து உடனடியாகத் தனது நிலையப் பொறுப்பதிகாரியிடம் (OIC) முறைப்பாடு செய்துள்ளார்.
நிலையப் பொறுப்பதிகாரி இது குறித்து அந்தப் பிரிவிற்குப் பொறுப்பான உதவி பொலிஸ்
அத்தியட்சகருக்கு (ASP) தகவல் வழங்கியதை அடுத்து, முதற்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டன.
விசாரணைகளின் போது, இச்சம்பவம் நடந்த சமயத்தில் அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
விசாரணையைத் தொடர்ந்து, மேலதிக ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய உதவி போலீஸ் அத்தியட்சகர் (ASP) உத்தரவிட்டுள்ளார்.
செய்திமூலம் – டெய்லிமிரர்










