இரு படையினர் பலியானதையடுத்து ஈரான்மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது அமெரிக்கா

ஜோர்தானிலுள்ள அமெரிக்க ராணுவ இலக்குகளை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரு அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. 8 ஆவது நாளாக அகோர தாக்குதல் தொடர்கின்றது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த வாரம் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

இது ஒரு முழு அளவிலான போராக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின் பேரில், சனிக்கிழமை மாலை 6 மணிக்கு (ET) இந்த வான்வழித் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைகம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) வணிகக் கப்பல்களுக்கு ஈரான் ஏற்படுத்தும் அச்சுறுத்தலைக் குறைக்கவும், ஜோர்தானில் அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு (IRGC) உடனடியாகத் தண்டனை வழங்கவும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானின் கடலோரக் கண்காணிப்பு மற்றும் வான் பாதுகாப்பு வசதிகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் அலை நிறைவு செய்யப்பட்டுள்ளது.

ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள சிரிக் (Sirik) மற்றும் ஈராக் எல்லைக்கு அருகிலுள்ள ஷாடேகன் (Shadegan) ஆகிய இடங்களுக்கு அருகில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அங்கு உயிர்ச்சேதமோ அல்லது உள்கட்டமைப்பு பாதிப்புகளோ ஏற்படவில்லை என அவை குறிப்பிட்டுள்ளன.

குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல்

இதற்குப் பதிலடியாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரானிய இராணுவம் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் அலி அல் சேலம் விமான தளம் ஆகியவற்றை இலக்கு வைத்து ட்ரோன் (Drone) தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் எதிர்பாராத விமான ரத்துகள் காரணமாக, வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை உலகளாவிய பயண எச்சரிக்கையை (Worldwide travel alert) விடுத்துள்ளது.

Related Articles

Latest Articles