நாட்டுக்கோழியைச் சமைத்த விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மகனால் தாக்கப்பட்ட தந்தை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (22) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழத்துள்ளார்.
இச்சம்பவத்தில் லிந்துலை, மவுசாக்கலை மேல் பிரிவைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:
கடந்த 18ஆம் திகதி லிந்துலை, மவுசாக்கலை மேல் பிரிவுப் பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாட்டுக்கோழி ஒன்றைத் தந்தை வெட்டிச் சமைத்துள்ளார். இது தொடர்பாகத் தந்தைக்கும் மகனுக்கும் இடையே க க்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தந்தையைக் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை உடனடியாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
தந்தையைத் தாக்கியதன் பின்னர் அப்பகுதியிலிருந்து தப்பியோடித் தலைமறைவாகியிருந்த மகன், கடந்த 19 ஆம் திகதி லிந்துலை பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார். மறுநாள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
