மோசடியான பணப் பரிவர்த்தனைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றில், 2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் 105 நிறுவனங்கள் மூலமாக சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 214.7 பில்லியன்) சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை (CID) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) முன்பாக இந்த விவரங்களை வெளிப்படுத்திய சிஐடி பிரதானியான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட, இலங்கைக்குப் பொருட்கள் எதுவும் இறக்குமதி செய்யப்படாமல், சுமார் 24,300 தந்திப் பரிமாற்றங்கள் (TTs) மூலம் இந்த பணம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை சுங்கத் திணைக்களம் அளித்த புகார்களைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட இந்த விசாரணையில், 55 நபர்கள் மற்றும் 227 வங்கிப் கணக்குகளுடன் தொடர்புடைய 105 நிறுவனங்கள் இந்தச் சட்டவிரோதப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட போலி பற்றுச்சீட்டுக்கள் மற்றும் போலி சுங்க ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் 13 அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளுக்குத் தொடர்பிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்த 43 நிறுவனங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கரவிட்ட குழுவிடம் தெரிவித்தார்.
இந்தச் சட்டவிரோத வலையமைப்பானது டுபாயை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய ஒரு சர்வதேச பணமோசடி நடவடிக்கையுடன் இணைந்து செயல்பட்டுள்ளதை விசாரணைகள் காட்டுவதாக சிஐடி மேலும் தெரிவித்துள்ளது.
இன்டர்போல் (INTERPOL) உதவியுடன் இரண்டு முக்கிய சந்தேகநபர்கள் டுபாயில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சந்தேகத்திற்குரிய பணமோசடி வலையமைப்பு குறித்து சிஐடியின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவும், குற்றப் புலனாய்வு சொத்துக்கள் விசாரணைப் பிரிவும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
