கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை நான்கு சிறுவர்கள் இணைந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோதே இவ்அனர்த்தம் சம்பவித்துள்ளது.
காணாமல்போன சிறுவனைத் தேடும் பணிகளில் பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் இணைந்து தீவிரமாக ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை கடற்படையின் சுழியோடிகளின் உதவியுடன் இரண்டாவது நாளாகவும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தீவிரத் தேடுதலின் பலனாக இன்று பிற்பகல் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான முதற்கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளின் பின்னர், அது கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனை உள்ளிட்ட சட்ட நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
க.யோகா










